பக்கங்கள்

14 February 2012

சொக்லேட் சாப்பிடுங்க இளமையுடன் இருங்க.

நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம்.
சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இளமை தோற்றம்:
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப்பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில்லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன்சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இளமையான தோற்றத்தைப் பெறமுடியும்.
மனதை சுறுசுறுப்பாக்கும்:
சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டஸ் வயதாவதை தடுப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சதவிகிதம் வரை குறைக்கிறது.
இதில் உள்ள செரோடோனின் என்ற மூலப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் டார்க் சாக்லேட்டிற்கு உண்டு.
கோகோவின் நன்மைகள்
சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவில் காணப்படும் பாலிஃபினைல், நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த குணநலன்கள் எல்லாம் சாதா சாக்லேட்டில் கிடையாது.
75 சதவிகிதம் கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டில் மட்டுமே இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை உட்கொள்வது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

04 February 2012

கைபேசியில் சதா பேசும் கர்ப்பிணிகளுக்கு முரட்டுப்பிள்ளை பிறக்கும்!

கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள் நலனுக்கும், மொபைல்போனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது.
முரட்டுத்தனம் அதிகரிப்பு
ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளதாக ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியுள்ளார். இதனை அந்த குழந்தைகளில் பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் மொபைல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் ஆய்வாளர் லீகா கூறியுள்ளார்.

30 January 2012

பிரசவ வலியை ஆண்களும் அனுபவிக்கிறார்களாம்!

கர்ப்பிணி மனைவியை கொண்ட ஆண்கள் தாமும் கர்ப்பகால வேதனையை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நாப்பி தயாரிப்பு நிறுவனமொன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. 16 முதல் - 55 வயதுடைய 2000 த்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
உடலியல் மாற்றங்கள்:
தந்தையாகப் போகும் 23 வீத ஆண்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், உடல் உடலியல் மாற்றங்களை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 26 சதவீதமானோர் மனநிலை மாற்றங்களுக்குள்ளாகினர். 10 சதவீதமானோர் உணவு ஒவ்வாமைக்கு ஆளானார்கள். 6 சதவீதமானோர் வாந்தியெடுத்தார்கள். 3 சதவீதமானோர் கற்பனையான பிரசவ வலியை அனுபவித்தனர்.
மசக்கை உணர்வு:
மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சில கணவர்கள் அழுதல், மனநிலை மாற்றத்திற்குள்ளாதல், வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் கர்ப்ப வலிகளையும் அனுபவிக்கின்றனராம். இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்ட தந்தையாகப் போகும் ஆண்கள், ஊறுகாய், தக்காளி, தோடம்பழம் போன்ற புளி உணவுகளில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையுடன் பிணைப்பு:
தந்தையாகப் போகும் ஆண்கள் தங்களது துணைவியின் கர்ப்பத்துடன் மிக நெருக்கமாகிவிடுவதுடன் ஆண்களில் பலர் கர்ப்பிணிகளைப் போன்று உணவு ஒவ்வாமை மற்றும் சுகவீனம் போன்ற கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உபாதைகளின் அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றனராம். தங்களது துணைவி கர்ப்பிணியாக இருக்கும்போது அதிக உணர்வுபூர்வமானவர்களாக விளங்குவதே இந்த ஆச்சரியமான நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் கூடுதலாக கர்ப்பிணிகளுக்கான வகுப்புகள் மற்றும் ஸ்கேன் சோதனைகளுக்கு செல்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் தாதியாக பணிபுரியும் மேரி ஸ்டீன் என்பவர், கர்ப்பத்தின் 12-14 ஆவது வாரங்களில் ஸ்கேன் சோதனைகளின்போது கணவர்களும் வருவதாகவும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான வகுப்புகளிலும் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 'இந்த விசயத்தில் ஆண்கள் இவ்வாறு ஈடுபடுவது குழந்தையுடனான அவர்களின் பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன் தமது துணைவியின் அனுபவங்கள் பற்றியும் அதிகம் அறிந்துகொள்கின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
நெருக்கம் அதிகரிப்பு:
தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது அப்பிள் மார்மைட் போன்ற உணவுகள் மீது விருப்பம் கொண்டதாக 32 வயதான மத்தியூ டோவ்னிங் என்பவர் கூறியுள்ளார். 'இந்த கர்ப்பத்திலும் பிரசவத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அது இருவரையும் மேலும் நெருக்கமாக்கியது. எனது உணர்வுகள் அவளின் உணர்வுகளுடன் மிக ஒத்திருப்பதை உணர்ந்தேன' என்கிறார் மத்தியூ.
அயல்நாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் தந்தையாகப் போகும் ஏராளமான ஆண்கள் மனைவியின் பிரசவ காலம் முடியும் வரை தாடி வைத்திருப்பதும், மனைவிக்காக பத்திய உணவு உண்பதும் நடைமுறையில் இருக்கிறது.உணர்வு பூர்வமான இந்த ஒத்துழைப்பு கர்ப்பிணிகளுக்கு கணவர் மேல் அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

19 January 2012

முதுகு வலிக்கு முதலுதவி!

முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:
1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள்.
2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...
வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.
(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.
(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.
(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.
(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.
(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.
4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.
5. உட்காரும் போது...
(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.
(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.
(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.
(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
6. நிற்கும்போது...
(அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.
(ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.
(இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.
7. தூங்கும்போது...
(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.
(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.
(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.
8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...
(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.
(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.
(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.
9. கார் ஓட்டும்போது...
(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.
10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.
11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.
12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.
13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி!
தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.
எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

09 January 2012

சாப்பிடும்போது நீர் அருந்துவதால் பாதிப்பு!

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால்,தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.
"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

29 December 2011

சருமம் பளபளக்க எளிதான வழிகள்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்...முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.
இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும்.வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

16 December 2011

உறக்கமே கண்களுக்கு அழகு.

சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். மொத்தத்தில் கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. அழகுக்கு அழகு சேர்க்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
கருவளையம் போக்க:
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது மற்றும் உற‌க்கம் குறைவதாலு‌ம் கண்களை சுற்றி கருவளைய‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம். இது கண்களின் அழகையே கெடுத்துவிடும். இதற்கு கண்களை அவ்வப்போது குளிர்ந்த நீரை‌க் கொ‌ண்டு முகத்தை‌க் கழுவுவது‌ம், அடிக்கடி கண் பகுதியில் படு‌ம்படி தெளிப்பதும் நல்லது. அதிகமாக டி‌வி பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌ப்பதோடு கண்களுக்குப் போதிய உறக்கம் அளித்தால் கருவளையம் மறையும். தொட‌ர்‌ந்து பு‌த்தக‌ங்க‌ள் படி‌ப்பது ந‌ல்லது. க‌ண்ணு‌க்கு ‌சிற‌ந்த ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.
கண்களுக்குப் பயிற்சி:
உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம். கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.
எட்டுமணி நேர தூக்கம்:
கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். கால்ஷியம், வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம்.
கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமானா‌ல் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சு அ‌ல்லது உருளைக்கிழங்கு துண்டு அ‌ல்லது வெள்ளரி துண்டினை கண்களின் மீது வைக்கலாம். இளஞ்சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்க கண்களின் உலர் தன்மை மறைந்து உற்சாகம் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக கண்களின் அழகைப் பராமரிக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.