பக்கங்கள்

22 பிப்ரவரி 2020

ஒற்றை தலைவலியை போக்க சிறந்த யோகாசனம்!

பிரம்மரி பிராணயாமம் என்றால் என்ன?உடலில் உண்டாகும் எந்த ஒரு கோளாறையும் போக்கும் சிகிச்சை முறைகளாக யோகா மற்றும் தியானம் என்னும் இரண்டு சக்திமிக்க உடற்பயிற்சிகள் போற்றப்படுகின்றன. அதில் பிரம்மரி பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி தேனீக்களின் ரீங்காரத்தை ஒத்த நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது சுவாசம் தொடர்பான கோளாறுகளை மட்டும் அல்ல ஒற்றைத் தலைவலியையும் போக்க உதவுகிறது.ஒற்றைத் தலைவலி என்பது ஒரு வகை தலைவலியாகும். சோர்வு, குமட்டல், வாந்தி, லேசான உணர்திறன் போன்ற பாதிப்புகளுடன் இணைந்து இந்த வலி உண்டாகிறது. சில நேரங்களில் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த வலி சில நேரங்களில் தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கலாம். ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க மைக்ரேய்ன் பவுண்டேஷன் தெரிவிக்கிறது. 10 முதல் 40 வயதில் உள்ளவர்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு பல்வேறு சுகாதார நிலைகள் காரணமாக உள்ளன. மனச்சோர்வு, உடல் சோர்வு, மனஅழுத்தம், எரிச்சல் உணர்வு, பருவநிலை மாற்றம், உணவு, உணவு அருந்தாமல் தவறவிடுவது மற்றும் இதர நிலைகள் ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் நிலைகளாகும். இதற்கு சரியான சிகிச்சை இல்லை. ஆனால் யோகா மூலம் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும். மனதை உடனடியாக அமைதிப்படுத்தும் ஒரு சிறந்த வழி பிரம்மரி பிராணயாமம் என்று யோகா ஆசிரியர்கள் நம்புகின்றனர். மூச்சுப்பயிற்சிகள் மூலம் கோபம், விரக்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, மனஅழுத்தம் போன்றவற்றை மனதில் இருந்து விரட்டுவது போன்றவை சாத்தியமாகிறது.பிரம்மரி பிராணயாமம் அல்லது தேனீக்களின் சுவாசம் என்பது ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும். தேனீக்களின் ரீங்காரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாக பிரம்மரி பிராணயாமம் உள்ளது. பதட்டம், கோபம், மனஅழுத்தம் போன்றவற்றை நிர்வகிக்க இந்த பயிற்சி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. வீட்டில், அலுவலகத்தில் என்று எந்த இடத்திலும் இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள முடியும். இதனால் மனம் அமைதி அடைகிறது. இந்த வகை பிராணயாம பயிற்சியில், மூச்சை வெளியிடும் போது தேனீக்களின் ரீங்காரம் போன்ற சப்தம் எழுப்பப்படுவதால் இந்த பயிற்சி பிரம்மரி பிராணயாமம் என்று வழங்கப்படுகிறது. பிரம்மரி என்பது சக்தி தேவியின் மற்றொரு பெயராகும். பிரம்மரி என்பதற்கு "தேனீக்களின் கடவுள்" என்று பொருள்.வாழும் கலையின்படி, இந்த மூச்சுப்பயிற்சி மூளை மற்றும் நெற்றியைச் சுற்றியுள்ள நரம்புகளின் வலியைக் குறைக்க உதவுகிறது. ரீங்கார ஒலியின் அதிர்வு காரணமாக முழு மனதிற்கும், உடலுக்கும் ஒருவித அமைதி கிடைக்கிறது.

1. ஒரு அமைதியான சூழலில் சுகாசன நிலையில் ரிலாக்ஸாக அமருங்கள்.
2. இரு கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்து, அந்த அமைதியான சூழலை அனுபவியுங்கள். கன்னம் மற்றும் காதை இணைக்கும் குருத்தெலும்பு பகுதியில் உங்கள் ஆட்காட்டி விரலை வைத்துக் கொள்ளுங்கள்.
3. ஆழமாக மூச்சை இழுத்து காது குருத்தெலும்பு பகுதியை அழுத்தி மூச்சை வெளியில் விடுங்கள். மூச்சை வெளியில் விடும்போது உங்கள் வாயை மூடியபடி "ம்" என்ற ஒலியை எழுப்புங்கள்.
4. உங்கள் காதுகளின் குருத்தெலும்பு பகுதியை மிகவும் கடினமாக அழுத்த வேண்டாம்.
5. "ம்" என்ற ஒலியை முடிந்த அளவு சத்தமாக எழுப்பவும்.
6. இதே முறையை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்யவும்.

1. ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு சிறந்த நன்மையைத் தரும் இந்த பயிற்சி.
2. பிரம்மரி பிராணயாமம் பதட்டம், கோபம், ஆச்சர்யம், விரக்தி மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்குகிறது.
3. ஹைப்பர் டென்சன் அல்லது உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் இந்த பயிற்சியால் நன்மை அடையலாம். அவர்களின் இரத்த அழுத்த நிலை வழக்கமான அளவை அடைய உதவும்.
4. உங்களுக்கு காய்ச்சல் அல்லது தலைவலி இருந்தால் இந்த பயிற்சியை செய்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
5. இந்தப் பயிற்சி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
6. உங்கள் மனது அமைதியாகும்.இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது, உங்கள் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தில் எந்த ஒரு அழுத்தத்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
3-4 முறைகளுக்கு மேல் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். மூச்சுப்பயிற்சி செய்வதற்கு முன்னர் யோகா நிபுணரிடம் ஆலோசனை கேட்டு இதனைத் தொடங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக