பக்கங்கள்

11 செப்டம்பர் 2011

உறக்கம் தரும் உணவுகள்!

நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கிவிடுவார்கள்.அவர்களை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.
தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது.புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்;பக்கத்தில் நெருங்காது.
அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
பீன்ஸ்:
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பசளிக்கீரை:
கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக