பக்கங்கள்

19 மார்ச் 2011

உள்ளத்தை உருக்கும் நாய்களின் பாசம்!

சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிரதேசத்தை சுனாமி பேரலை தாக்கிய போது வீடொன்று இடிந்து விழுந்ததில் நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.
இதன்போது அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.
மேற்படி நாய் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் சென்ற போது உடல் முழுவதும் மண் சகதியால் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த நாயொன்று, அவர்களை இடிந்து விழுந்த 4 மாடி கட்டிட வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இடிபாடுகளின் கீழ் நாயொன்று சிக்கியிருப்பதை கண்டு வியப்படைந்தனர். ஆரம்பத்தில் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாய் இறந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் சென்று அவதானித்த போது நாய் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.
உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.
மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.
மனதை உருக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி “யு ரியூப்’ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக